எப்படி இருக்கிறது பிரபுதேவா பூதமாக நடித்துள்ள மைடியர் பூதம் – விமர்சனம்!
தமிழ் சினிமாவில் நடனம் மூலம் மிகவும் ரசிக்கப் படுபவர் பிரபுதேவா. நடிகராக மாறி பின்னர் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். தற்போது மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பியுள்ள பிரபுதேவா ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படமாக வெளியாகியுள்ளது மைடியர் பூதம். மஞ்சப்பை மற்றும் கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். மேலும் சிறுவன் அஸ்வந்த், ரம்யா நம்பீசன், சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பூத உலகின் ராஜாவான பிரபுதேவா தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் பிரபுதேவாவின் மகன் தவறுதலாக ஒரு புற்றுக்குள் விழுந்துவிட அங்கு பல ஆண்டுகளாக தவம் செய்துவரும் முனிவரின் தவம் கலைகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட முனிவர் சாபம் கொடுக்க அந்த சாபத்தை தாம் ஏற்றுக்கொண்டு பொம்மையாக மாறி பூமியில் விழுகிறார் பிரபுதேவா. சாபம் நீங்க வேண்டும் என்றால் யார் அந்த பொம்மையை எடுக்கிறார்களோ அதில் உள்ள ஒரு மந்திரத்தை சொன்னால்தான் மீண்டும் பிரபுதேவா பூத உலகம் செல்வார் இல்லையேல் காற்றோடு காற்றாக கலந்துவிடுவார். பூமியில் தனது தாய் ரம்யா நம்பீசன் உடன் வசித்து வருகிறான் சிறுவன் அஸ்வந்த். அஸ்வந்துக்கு திக்கு வாய் பிரச்சினை உள்ளதால் பள்ளியில் எல்லோரும் அவனை கிண்டல் செய்கின்றனர். இதனால் மிகவும் வேதனையில் இருக்கும் அஸ்வந்திடம் அந்த பொம்மை கிடைக்கிறது. இறுதியில் பிரபுதேவா தனது பூத உலகம் சென்றாரா? அஸ்வந்தின் பிரச்சினையை பூதம் தீர்த்துவைத்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராமநாராயணன் டைப் படத்தை தியேட்டரில் பார்த்த உணர்வை தருகிறது மை டியர் பூதம். குழந்தைகளுக்கான படமாக ராகவன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
பூதமாக பிரபுதேவா மொட்டை அடித்து நடித்துள்ளார். அவரது தோற்றமும் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. சிறுவன் அஸ்வந்த் இந்த சிறிய வயதில் நடிப்பில் அசத்தியுள்ளான். எங்க வீட்டு வேலன் படத்தில் சிம்புவை பார்த்தது போன்று இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கண்ணீர் நீர் வர வைத்துள்ளார். நீண்ட வசனங்களை அசால்ட்டாக பேசி கைத்தட்டல் வாங்குகிறார். பிரபுதேவா, அஸ்வந்த் இருவரும் வரும் காட்சிகள் கலகலப்பாக உள்ளன. இமானின் இசையில் மாஸ்டர் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ரம்யா நம்பீசன் பாசமான அம்மாவாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு குறை இருந்தால் முதலில் அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். பூதம் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டாலஜியாக இருக்கும். ஆனால் வீடியோ கேம், ஆக்ஷன் படங்களை பார்க்கும் 2k கிட்ஸ்களை இப்படம் கவருமா என்று சந்தேகம்தான். சின்ன பசங்க பார்த்து மகிழலாம். பெரியவர்களுக்கு மெசேஜ் இருந்தாலும் ஈர்க்குமா என்பது கேள்விக்குறியே. மைடியர் பூதம் குழந்தைகளுக்காக..

