வெங்கட் பிரபுவின் ஹன்ட் “கஸ்டடி” எப்படி இருக்கிறது – திரை விமர்சனம்!

வெங்கட் பிரபுவின் ஹன்ட் “கஸ்டடி” எப்படி இருக்கிறது – திரை விமர்சனம்!

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமான மேக்கிங் மற்றும் காமெடி கலந்த திரைக்கதை என படு சுவாரசியமாக இருக்கும். தற்போது முதல்முதலாக தெலுங்கு சென்று நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி பார்க்கலாம்.

நாக சைதன்யா போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருப்பவர். ஒருநாள் இரவு ரோந்து பணியின்போது இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் அதில் ஒருவர் சிபிஐ அதிகாரி, மற்றொருவர் செல்வாக்கு படைத்த ரவுடி. மேலிடத்துக்கு தகவல் கிடைத்து அதிகாரிகள் அங்கு வந்து சிபிஐ அதிகாரியை கொலை செய்துவிட்டு ரவுடியை கொண்டு செல்ல முயல்கின்றனர். உடனே அங்கிருக்கும் ஹீரோ நாக சைதன்யா அதனை தடுத்து மூவரும் தப்பித்து செல்கின்றனர். கூடவே காதலியும் இவர்களுடன் இணைகிறார். ரவுடியை எப்படியாவது பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நினைக்கும் சிபிஐ அதிகாரிக்கு நாயகன் உதவுகிறான். இறுதியில் யார் இந்த ரவுடி? இவருக்கும் அரசுக்கும் என்ன தொடர்பு? நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்படுத்தப்பட்டாரா? என்பதே கஸ்டடி படத்தின் கதை.

பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்கள் தமிழ் சினிமாவில் வந்த படங்களை ஸ்கூப் செய்து எடுக்கப்பட்டு இருக்கும்.‌அது காமெடிக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கும்.‌ ஆனால் இப்படத்தை பார்த்தால் மொத்த படமுமே அப்படி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. துளியும் புதுமையில்லை. இது வெங்கட் பிரபு படமா என்று நினைக்க வைக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் பொறுமையை சோதிக்கின்றன. பின்னர் ரவுடியாக அரவிந்த் சாமி வந்தவுடன் கொஞ்சம் வேகமெடுக்கும் கதை பின்னர் அப்படியே படுத்து விடுகிறது. இடையில் பிரேம்ஜி வேற கடுப்பேத்துகிறார். நாக சைதன்யா வெங்கட் பிரபுவை நம்பி இப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.‌ஆனால் மோசமான கதை அவரது உழைப்பை வீணடித்துவிட்டது.

கீர்த்தி ஷெட்டி படத்துக்கு தேவையேயில்லை. அதேபோல் பிரேம்ஜி காட்சிகளும் தேவையில்லாதது. திடீரென ராம்கியை ஏஜெண்ட் என்கிறார்கள் இது சீரியஸ் படமா அல்லது காமெடி படமா என குழப்பம் ஏற்படுகிறது. சரத்குமார் தன்னுடைய வேலையை நன்றாக செய்துள்ளார். பிரியாமணி முதல்வராக வந்துபோகிறார். படத்தில் ஜீவா எதுக்கு நடித்தோம் என்று தெரியாமலேயே இறந்து போகிறார். யுவன் இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். இதில் இளையராஜாவும் இசை அமைத்துள்ளார் என்கின்றனர் எங்கேயும் அது தெரியவில்லை. சிபிஐ அதிகாரிகள் லோக்கல் போலீஸ்க்கு பார்த்து பயந்து ஓடுவது போல காட்சிகள் உள்ளது.‌ கொடுமை. ஒரு மாநில முதல்வருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கின்றனர்.

இனி வெங்கட் பிரபு இங்கேயே படம் எடுக்கட்டும். தெலுங்கு எல்லாம் நமக்கு ஒத்துவராது. இங்கிருக்கும் இயக்குனர்களை எல்லாம் அங்கு கூட்டி சென்று நல்லா வெச்சு செய்து அனுப்புகின்றனர். நம்ம ஆட்கள் மேல் அவ்வளவு என்ன காண்டோ தெரியவில்லை. மொத்தத்தில் கஸ்டடி…. ரொம்ப கஷ்டம் டி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments