எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்!
எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்!
![]()
மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கல்கியின் நாவலை தழுவி மணிரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து இன்று வெளியான இரண்டாம் பாகத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.
முதல் பாகத்தில் இலங்கை களத்தில் கடலில் அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் இருவரும் மூழ்கியதுடன் ஊமை ராணியின் அறிமுகப்படுத்துடன் முதல் பாகம் நிறைவடைந்தது. இந்த இரண்டாம் பாதி முதல் பாகத்திற்கு விடை காணுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டாம் பாகம் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினியின் இளமை பருவத்தின் தொடங்குகிறது. பின்னர் கமல்ஹாசன் குரலில் முன்கதை சுருக்கம் சொல்லப்படுகிறது.
அருண்மொழி வர்மனின் மரணச் செய்தி கேட்டு ஆதித்த கரிகாலன் மிகுந்த கோவத்துடன் தஞ்சை நோக்கி விரைகிறார். மற்றொரு புறம் ஊமைராணியால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் புத்த பிட்சுகளிடம் தஞ்சம் அடைகின்றர். பின்னர் அருண்மொழி வர்மன் உயிருடன் இருக்கும் செய்தி தஞ்சையை அடைகிறது. ஆதித்த கரிகாலனை கொல்ல துடிக்கும் நந்தினி ஆதித்த கரிகாலனை கடம்பூர் வரவழைக்கிறார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும் கடம்பூர் செல்கிறார் ஆதித்த கரிகாலன். ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது? அருண்மொழி வர்மன் முடிசூடி கொண்டாரா? சோழ சாம்ராஜ்யம் என்ன ஆனது ? என்பதை இரண்டாம் பாகம்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். ஆதித்த கரிகாலனாக கம்பீரமாக இருக்கிறார். அவரும் நந்தினியான ஐஸ்வர்யா ராயும் கடம்பூர் மாளிகையில் பேசும் காட்சிகள் மிக அழகான எடுக்கப்பட்டுள்ளன. படத்துக்கு மிகப் பெரிய பலமே நடிகர்களின் தேர்வுதான். கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, பிரபு என அத்தனை கதாபாத்திரங்களுக்கும் சரியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் நடிப்பும் பாராட்டும் படி உள்ளது. வந்தியத்தேவன், குந்தவை இடையேயான காதல் காட்சி படத்தில் அழகாக காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் ராஜ்ஜியம் நடத்தியுள்ளார். படம் முழுவதும் ரகுமானின் இசை அதகளம் செய்துள்ளது. ஐஸ்வர்யா ராய் படத்தில் சொல்வது போல் நாகப்பாம்பு மாதிரி பழிவாங்கும் எண்ணத்தை தனது ஆழ்மனதில் பதித்து சிறப்பாக நடித்துள்ளார். தனது அழகினாலேயே மயக்கி காரியம் சாதிப்பது, தனது தாய் குறித்தான உண்மை அறிந்து கலங்குவது நந்தினி அழுவதை பார்க்கும் ஒரே ஆண்மகன் நீதான் என்று வந்தியத்தேவனிடம் கூறும் காட்சி எல்லாம் சூப்பர். அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி இந்த பாகத்திலும் குறிப்பிட்ட காட்சிகள் அதிகம் இல்லை. இவரை சுற்றி கதை நகர்ந்தாலும் சில இடங்களில் காணாமல் போகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பொன்னியின் செல்வன் என்பதை நிரூபிக்கிறார். த்ரிஷாவும் அப்படியே இந்த பாகத்தில் அவரது புத்திக்கூர்மையை காட்டும் காட்சிகள் இல்லை. ஆனாலும் அழகால் குந்தவை பார்ப்போர் மனதை ஆட்சி செய்கிறார். திரைப்பட வடிவத்திற்காக சில காட்சிகளை மணிரத்னம் இணைத்துள்ளார். அது நன்றாகவும் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ். அதுமட்டுமின்றி ஆதித்த கரிகாலன் மரணம் பற்றியதையும் கல்கியை போலவே நம் யூகத்திற்கு விட்டுவிட்டார். நந்தினியின் இறுதி முடிவு வருத்தம். வந்தியத்தேவன் கார்த்தி இந்த முறை கொஞ்சம் காமெடி நிறைய வீரம், ரவிவர்மனின் கேமரா அற்புதம். காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளன.
மொத்தத்தில் நமது வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். குறைகள் இருந்தாலும் அதனை மறந்துவிட்டு நமது மன்னர்களின் வரலாறுக்காக கட்டாயம் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். நல்ல திரை அனுபவம் கிடைக்கும்.

