பரோல் திரைப்பட விமர்சனம்!

டிரிப்பர் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ள படம் பரோல். இப்படத்தை துவாரக் ராஜா இயக்கியுள்ளார். லிங்கா, கே.எஸ்.கார்த்திக், கல்பிகா, வினோதினி, மோனிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி லிங்கா, கார்த்திக் இருவரும் அண்ணன், தம்பி. அண்ணன் சிறு வயதில் ஒரு குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிலர் கரிகாலனிடம் தகாத முறையில் நடந்து கொள்ள மூவரையும் கொலை செய்கிறார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார். கரிகாலனை அவரது அம்மா ஜானகி வெளியே எடுக்கிறார். சிறு வயதில் இருந்து அம்மா அண்ணனுக்குத்தான் அதிக பாசம் தருகிறார் என்ற காரணத்தால் அண்ணனை வெறுக்கிறார் தம்பி கார்த்திக். இந்நிலையில் சிறையில் இருந்துவந்தும் திருந்தாத அண்ணன் தொடர்ந்து ஒரு இரட்டை கொலையை செய்து இரட்டை ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் சிறைக்கு செல்கிறார். இந்நிலையில் அவரது அம்மா இறந்துவிடுகிறார். அண்ணன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அம்மாவின் இறுதிச் சடங்கை தானே நடத்த முடிவெடுக்கிறார். ஆனால் அண்ணனின் கூட்டாளிகள் எதிர்க்க வேறு வழியின்றி வழக்கறிஞர் வினோதினியின் உதவியுடன் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சிக்கிறார் தம்பி. இறுதியில் அண்ணனுக்கு பரோல் கிடைத்ததா? சிறையில் இருக்கும் அண்ணனின் திட்டம் என்ன? என்பதே இப்படத்தின் கதை.

அண்ணன் கரிகாலனாக லிங்கா , தம்பி கோவலனாக கார்த்திக் இருவரும் போட்டிக் கொண்டு நடித்துள்ளனர். பீச்சாங்ககை , என்னங்க சார் உங்க சட்டம் ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்திலும் நல்ல கதாபாத்திரம் அதனை நன்றாக பயன்படுத்தியுள்ளார். கோபக்கார இளைஞனாக அண்ணன் மீது பொறாமை கொண்ட நபராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லிங்காவின் நடிப்பும் நன்றாக உள்ளது. என் வாழ்க்கையில் எதுவுமே வெளியில் சொல்லுகிற மாதிரி இல்லையே என்று வருந்துவது. காதலிக்காக பழிவாங்க துடிப்பது என கச்சிதமாக நடித்துள்ளார். கல்பிகா மற்றும் மோனிஷா இருவரின் நடிப்பும் நன்று. அம்மாவாக நடித்துள்ள ஜானகி சுரேஷ் பாசமுள்ள அம்மாவாக கவனம் ஈர்க்கிறார். என்னதான் கொலைகாரணாக இருந்தாலும் அவனை அப்படியே விட்ற முடியுமா என்று கேட்டு கண்கலங்க வைக்கிறார். வட சென்னை வாழ்க்கையை இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர். ஆனாலும் இன்னும் எத்தனை படங்களில் வடசென்னை மக்களை ரவுடிகளாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிப்பார்கள் என்று தெரியவில்லை. மகேஷ் திருநாவுக்கரசரின் ஒளிபரப்பு வடசென்னை ஏரியாக்களை அப்படியே காட்சிப்படுத்தி உள்ளது. ராஜ்குமார் அமல் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்று. பரோல் எப்படி வழங்கப்படுகிறது என்பதை டீடெய்லாக சொல்லியுள்ளனர். நீதிமன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. சிறு சிறு விஷயங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியுள்ளனர். அண்ணன் , தம்பிக்கு இடையேயான போட்டியை அம்மா பாசம் வழியே சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர்.

