கருணாஸ் நடித்துள்ள “ஆதார்” திரைப்படத்தின் விமர்சனம்!

 

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஆதார். கருணாஸ் , ரித்விகா, அருண்பாண்டியன், இனியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன்னைவிட விட அதிக வயது குறைவான ரித்விகாவை திருமணம் செய்துகொள்கிறார். ரித்விகாவிற்கு பிரசவ வலி‌வர‌ அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு கருணாஸ் சென்றுவிடுகிறார். காலையில் வந்து பார்க்கும்போது குழந்தை மட்டுமே‌ இருக்கிறது மனைவி ரித்விகாவை காணவில்லை. உதவிக்கு இருந்த இனியாவும்‌ மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். தனது மனைவியை காணவில்லை என்று கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார் கருணாஸ். அங்கு ஏட்டாக இருக்கும் அருண்பாண்டியன் புகாரை வாங்கிக்கொண்டு அனுப்புகிறார். வழக்கு விசாரணையின் முடிவில் கருணாஸை அழைக்கும் இன்ஸ்பெக்டர் பாகுபலி பிரபாகரன், மற்றும் உயர் அதிகாரி‌‌ உமா ரியாஸ் இருவரும் உன் மனைவி காணாமல் போகவில்லை கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் விட்டாள் என்று கூறுகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் கருணாஸ் என் மனைவி அப்படிப்பட்டவள்‌ அல்ல என்று மன்றாடுகிறார். இறுதியில் கருணாஸின் மனைவி என்ன‌ ஆனார்? இனியா எப்படி உயிரிழந்தார்? காவல்துறை சொன்னது உண்மையா? என்ற‌ கேள்விகளுக்கு விடை சொல்கிறது ஆதார் திரைப்படம்.

கருணாஸ் தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு உயிர்‌ கொடுத்துள்ளார். கட்டிடத் தொழிலாளியாகவே வாழ்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை‌ ஒரு மென்சோகம் படர்ந்த முகத்துடன் வலம்வந்து கதாபாத்திரத்துக்கு நிறைவை தந்துள்ளார். அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இவர்களைத்தவிர அருண்பாண்டியன், உமா ரியாஸ் இருவரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். இனியா மற்றும் ரித்விகாவிற்கு அதிக வேலையில்லை. ஒரு காட்சிக்கும் அடுத்தக்காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். முதல்பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எப்படி அரசு இயந்திரம் துணை போகிறது என்பதையும் சாமானியனின் உயிர் ஒரு பரிசோதனை கூடத்து எலியை விட‌ மோசமாக பயன்படுத்தப்படுவதையும் தோலுரித்து காட்டியுள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தேன் மிட்டாய் மாங்காத்துண்டு பாடல் காதுகளுக்கு இதம் என்றால் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும். ஆனாலும் சொல்ல வந்த கருத்தில் கவனம் பெறுகிறார் இயக்குனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted