தனுஷ் நடிப்பில் வாத்தி திரை விமர்சனம்!
தனுஷ் நடிப்பில் வாத்தி திரை விமர்சனம்!
![]()
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. விஜய்க்கு பிறகு தனுஷும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து படம் பண்ணியுள்ளார். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
1990களில் தனியார்மயமாக்கலால் மருத்துவம், பொறியியல் போன்ற கல்வி நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. இதனை பயன்படுத்தி நுழைவுத் தேர்வுக்கு ஏராளமான கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் பார்க்கின்றன தனியார் பள்ளிகள். அதன் கூட்டமைப்பின் தலைவராக பணத்தாசை பிடித்த சமுத்திரக்கனி. இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்க அரசு தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க கட்டண ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து கல்வி கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். இதற்காக மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்புகிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்று நினைக்கும் தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? சமுத்திரக்கனியின் திட்டம் நிறைவேறியதா ? என்பதை தெலுங்கு மசாலா தூக்கலாக சொல்லியுள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
![]()
படத்தின் மிகப் பெரிய ஆறுதல் தனுஷ் மட்டும்தான். தனி ஒருவனாக படத்தை தோலில் சுமக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டதால் வசனங்கள் சில இடங்களில் தெலுங்கில் பேசியுள்ளனர். இதனால் படத்தை பார்க்கும் நமக்கு தெலுங்கு படத்தை பார்த்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. முதல் பாதியில் கல்வி, சீர்திருத்தம் என பேசினாலும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் தடுமாறுகிறது. இரண்டாம் பாதியில் மாணவர்களும் ஊர் மக்களும் திருந்தும் காட்சிகள் எல்லாம் பக்கா சினிமாத்தனம். தனுஷ் என்னும் நல்ல நடிகனை ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குள் அடைத்துவிட்டார் இயக்குனர். நாயகி சம்யுக்தாவுக்கு பெரிதாக வேலை இல்லை. ஒரே ஒரு பாடலில் மட்டும் கவர்கிறார். தெலுங்கு துணை நடிகர்கள் பட்டாளம் , கிராமம் போன்ற செட் அமைப்பு எல்லாமே ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமுத்திரக்கனியிடம் வழக்கமான வில்லத்தனம் மிஸ்ஸிங். வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. ஆனால் முழு படமாக நம்மை சோதிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் நாடோடி மன்னன், வா வாத்தி பாடல்கள் இதம். பின்னணி இசை தூங்கிக் கொண்டு இருக்கும் நம்மை அவ்வப்போது எழுப்பிவிடுகின்றன. மொத்தத்தில் பழைய மாவை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு தோசை ஊத்துவது. தனுஷ் அற்புதமான நடிகன் அவரை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.

