ரியோ ராஜின் “ஜோ” திரைப்பட விமர்சனம்!
ரியோ ராஜின் “ஜோ” திரைப்பட விமர்சனம்!
![]()
ரியோ ராஜ் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து இளைஞிகள் மத்தியில் பரிச்சயமானவர். அதனை தொடர்ந்து அடுத்த எங்கே வெள்ளித்திரைதானே என்ற எழுதப்படாத விதி உள்ளது. அதனை போலவே இவரும் வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்தார். தற்போது ஜோ என்ற படம் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. அருளானந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு என்று தனி மவுசு உண்டு அதுவும் கல்லூரி காதல் படங்களுக்கு என்று தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. இதுவும் அந்த வகையிலான காதல் கதை தான். பலமுறை பார்த்து பழகிய கதைக்களம் தான் ஆனால் அதிலும் சில சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்து ரசிக்கும் படி கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன்.
கதைப்படி ரியோ மற்றும் அவரது நண்பர்கள் இன்ஜினியரிங் காலேஜில் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் அவர்கள் வகுப்பில் படிக்கும் நாயகி மாளவிகாவை ரியோ காதலிக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நாயகி ஊருக்கு சென்றுவிடுகிறார். ஆனாலும் போன் மூலம் இவர்கள் காதல் தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆனால் இவருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இவர்களது காதல் நாயகி வீட்டிற்கு தெரிய வர எதிர்ப்பு வருகிறது. வீட்டில் வேறு நபருடன் திருமண ஏற்பாடு நடக்க நாயகி தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனமுடையும் நாயகன் குடிக்கு அடிமையாக நண்பர்கள் மற்றும் பெற்றோர் சேர்ந்து அவருக்கு பாவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர். பாவ்யாவுக்கோ வேறு ஒரு பிரச்சினை காரணமாக இவரை வெறுக்கிறார். இறுதியில் பாவ்யாவுக்கு என்ன பிரச்சினை? இருவரும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் கதை.

கல்லூரி காதல் கதை என்பதால் ஆரம்பத்தில் இருந்து என்னென்ன காட்சிகள் வருமோ அவை எல்லாம் அப்படியே வருகின்றன. ஆனாலும் போர் அடிக்கவில்லை. அத்தனை இளமையாக இருக்கிறது. இறுதியில் சிறப்பான ட்விட்ஸ் உடன் நம்மை மகிழவித்து அனுப்புகிறார் இயக்குனர்.
ரியோ கல்லூரி மாணவர் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருத்திப் போகிறார். நடிப்பிலும் நன்றாக நடித்துள்ளார். எமோஷனல் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். காதலியாக வரும் மாளவிகா மனோஜ் நல்வரவு. சின்ன சின்ன முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. நண்பர்களில் அன்புதாஸன் , ஏகன் உள்ளிட்டோரின் நடிப்பும் அசத்தல்.
இரண்டாம் பாதியில் வரும் பாவ்யாவின் நடிப்பு தொடக்கத்தில் ஏற்க மறுத்தாலும் போகப் போக பிடித்துப் போகிறது. படத்தின் மற்றொரு பலம் சித்து குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள். அருமையான பாடல்களை கொடுத்து பின்னணி இசையில் படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

ராகுல் கேஜி விக்னேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. இளமை ததும்பும் காட்சிகளை வழங்காயுள்ளார். வருணின் எடிட்டிங் கச்சிதம். பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் முடிந்தவரை அழகான திரைக்கதை அமைத்து இறுதியில் நம்பகத்தன்மையான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஹரிஹரன். காதலித்தவர்களும் காதல் தோல்வி கண்டவர்களும் காதலை தேடிக்கொண்டு இருப்பவர்களும் காதலை தொலைத்தவர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இந்த ஜோ. மொத்தத்தில் ஜோ – ஜோ என பெய்யும் மழை. ரேட்டிங் 3.5/5

