களவாணி இயக்குனரின் படமா இது? பட்டத்து அரசன் விமர்சனம்!
![]()
களவாணி, வாகை சூட வா போன்ற நல்ல படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பட்டத்து அரசன். கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காளையார் கோவிலில் மகன்கள் மருமகள்கள்,பேரன்கள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் பொத்தாரி ராஜ்கிரண். ராஜ்கிரண் அரசு வேலையை விட்டுவிட்டு ஊருக்காக கபடி விளையாடுகிறார். ஊரின் பெருமைக்காக 40 ஆண்டுகள் கபடி விளையாடிய இவருக்கு ஊரில் சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளனர். இவரது இரண்டாவது தாரத்து மகன் வழி பேரன் அதர்வா. இந்நிலையில் செய்யாத குற்றத்திற்காக ராஜ்கிரண் குடும்பத்தில் ஒரு உயிர்பலி விழுகிறது. ஊர் மக்கள் இவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர். தங்கள் மீது விழுந்த பழியை குடும்பமாக சேர்ந்து கபடி விளையாடி எப்படி போக்கினர் என்பதே பட்டத்து அரசன்.

இந்த 2022ம் ஆண்டில் கூட இதுபோன்ற அதரப் பழசான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றதே என்பதை நினைக்கும்போது தமிழ் சினிமாவை நினைத்து பாவமாக உள்ளது. கதைதான் பழசு என்று பார்த்தால் திரைக்கதை அதுக்கும்மேல நம்மை சோதிக்கிறது. அதர்வா தன்னால் முடிந்தவரை படத்தை காப்பாற்ற போராடுகிறார். படத்தில் ஒரு காட்சியில் அவரையே மற்றவர்கள் தான் காப்பாத்துகிறார்கள். ராஜ்கிரண் இந்த வயதில் கபடி ஆடுவது எல்லாம் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகையும் கபடி வீராங்கனையாக வருகிறார். ஆனால் அவரும் இக்குடும்பத்திற்கு சுமைதானே தவிர வேறில்லை. ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஏதோ கடமைக்கு போட்டதுபோல் உள்ளது.
பட்டத்து அரசன் பேருக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மொத்தத்தில் இயக்குனர் சற்குணத்திற்கு மற்றுமொரு சறுக்கல்.

