வெற்றி நடிப்பில் ஜீவி-2 விமர்சனம்!
கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் வெற்றி, கருணாகரன், மோனிகா, அஸ்வினி, மைம் கோபி, ரோகினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பாராட்டுக்களை பெற்ற படம் ‘ஜீவி.’ ஜீவி படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது ஜீவி 2.

சென்னையில் பேச்சுலராக தங்கிக்கொண்டு வேலை செய்யும் ஹீரோ வெற்றியும், கருணாகரனும் ஒரே அறையில் தங்குகிறார்கள். அவர்களது ஹவுஸ் ஓனரான ரோகினி கண் பார்வையற்ற தனது மகளின் திருமணத்திற்காக 50 சவரன் நகை வாங்கி அதை பீரோவில் வைக்க, அந்த பீரோ சாவி எதிர்ப்பாரதவிதமாக தொலைந்துவிடுகிறது. தொலைந்த சாவி ஹீரோ வெற்றியிடம் கிடைக்க, வறுமையினால் விரக்தியில் இருக்கும் வெற்றி அந்த சாவியை பயன்படுத்தி நகையை கொள்ளையடித்து விடுவதோடு, தனது புத்திசாலித்தனத்தால் போலீசிடம் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார்.
நகை காணாமல் போனது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரித்தாலும், வெற்றி தனது சாதுர்யத்தால் போலீசிடம் சிக்காமல் எஸ்கேப் ஆக, கதையில் திடீரென்று ஒரு மாற்றம். அதாவது, ஹவுஸ் ஓனரான ரோகினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் போல, ஹீரோ வெற்றியின் வாழ்க்கையில் நடக்கிறது. இதை ஒருவித அறிவியல் என்று கணிக்கும் வெற்றி, இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், தனது நண்பர் கருணாகரன் இறந்துபோவார் என்பதை அறிந்து கொள்வதோடு, தனது வாழ்க்கைக்கும், ஹவுஸ் ஓனர் வாழ்க்கைக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதை அறிய முற்படும் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைப்பதோடு, சில ஆச்சரியமான விஷயங்களும் நடக்கிறது. இதுவே முதல் பாகத்தின் கதை. இதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ஜீவி2. ‘மாநாடு’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் ‘ஜீவி 2’ படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தையும் விஜே.கோபிநாத் இயக்கியுள்ளார். முதல் படத்தின் பாகத்தில் கூறப்பட்ட முக்கோண விதி தொடர்பியல் ஆகியவற்றின் தொடர்ச்சி தான் ஜீவி 2.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரு வீட்டில் திருட ஹீரோ வெற்றி முடிவு செய்கிறார். அந்த திருட்டை அவர் செய்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை. வெற்றியை விடாமல் துரத்தும் தொடர்பியல் இப்படத்திலும் தொடர்கிறது. வெற்றி நண்பனாக வரும் முனாஃப் சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார். இவரைச் சுற்றியே கதை நகர்வது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் மிஸ்ஸிங். ஏற்கனவே தொடர்பியல் பற்றி நமக்கு முதல் பாகத்தில் சொல்லப்பட்டு விட்டதால் இந்த பாகத்தில் ஒன்ற முடியவில்லை. ஆனால் தமிழில் இது ஒரு வித்தியாசமான முயற்சி தான். இயக்குனருக்கும் இப்படத்தை நம்பி தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

