எப்படி இருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் – விமர்சனம்!
இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக மாறி தமிழ் திரை உலகில் கலக்கி வருகிறார். அதிலும் வில்லனாக அவர் நடிக்கும் படத்தில் ஹீரோவை விட அதிகம் பாராட்டு வாங்குகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தை விட எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடமையை செய் படத்தில் எஸ்.ஜே .சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்செட் அசோகன், சார்லஸ் வினோத் போன்றோர் நடித்துள்ளனர். சிவில் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா மனைவி யாஷிகா ஆனந்த் மற்றும் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று அவருக்கு வேலை பறிபோக ஒரு பிளாட்டில் வாட்ச்மேனாக வேலைக்கு செல்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து நடக்க, கோமா போன்ற ஒரு புதிய நோயால் அவதிப்படுகிறார். உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? அந்த நோயிலிருந்து மீண்டாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே கடமையை செய் படத்தின் கதை.

மற்ற படங்களை போல் இல்லாமல் சற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டாம் பாதி முழுக்கவே வசனமே இல்லாமல் உடல் அசைவுகளாலும், முகபாவனைகளால் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவரது மனைவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி அதிகம் இன்றி தனக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நடிப்பு தான் வரவே இல்லை அவரிடம். படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்த படம் எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து விடுகிறது. கதையை விட டெக்னிக்கலாகவே இந்த படம் மிகவும் சுமாராக உள்ளது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பு மேலும் இந்த படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக படத்தில் காமெடி என்று நினைத்து வைத்துள்ள எதுவும் கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை, மாறாக கோபத்தை தான் வரவழைக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் மாமனாராக வரும் சேசுவை வைத்து காமெடி என்ற பெயரில் என்னமோ ட்ரை பண்ணி உள்ளனர். திருடனாக வரும் மொட்டை ராஜேந்திரனின் காமெடியும் சுத்தமாக எடுபடவில்லை. படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் நம்பத் தகுந்த அளவிற்கு இல்லை. அதிலும் கதாபாத்திரங்களில் மோசமான நடிப்பு மற்றும் திரைக்கதை எப்போதும் படம் முடியும் என்ற உணர்வையே தருகிறது.
கிராபிக்ஸ் காட்சிகள், எடிட்டிங், சிஜி என அனைத்து டிபார்ட்மெண்டுகளும் கடமைக்கு வேலை செய்தது போல் உள்ளது. கணவன் அடிபட்டு எந்திரிக்க முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை ஜாலியாக ஷாப்பிங் போவது போல் இடம் பெற்றும் காட்சிகள் எல்லாம் பிரமாதம். மாநாடு கதையை தேர்ந்தெடுத்து நடித்த எஸ்.ஜே.சூர்யாவா இதில் நடித்திருக்கிறார் என்ற கேள்வியே படம் முடிந்து வெளியில் வரும் போது ஏற்படுகிறது.

