சோழர்கள் வருகிறார்கள் – ரகுமான் இசையில் சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியீடு!
கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர் உட்பட பலர் இதனை திரைப்படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இதனை சாத்தியமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் காவியம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவைட்டரையராக சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இத்திரைக்காவியத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் 16 விநாடி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஏஆர்.ரகுமான் இசையில் சோழர்கள் வருகிறார்கள் என்ற வாசகம் அடங்கிய இவ்வீடியோ இப்பவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வெளியிடப்பட்டுள்ளதை பார்த்தால் விரைவில் படத்தின் பாடல் அல்லது டீஸர் வெளியாகலாம் என்று யூகிக்க முடிகிறது. 9ம் நூற்றாண்டில் சோழர்கள் பற்றிய வரலாற்றை இந்த பொன்னியின் செல்வன் பதிவு செய்துள்ளது. அதனை காண தமிழனாக ஒவ்வொருவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

