திடீரென ரசிகர்களை சந்தித்த விஜய் : காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவரது ரசிகர் பட்டாளம் எண்ணிலடங்காதவை. தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக புகைப்படம் எடுப்பதை நிறுத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று குறிப்பிட்ட மாவட்டத்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கப்போவதாக கூறப்பட்டது. அதன்படி சேலம், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் பனையூரில் உள்ள விஜயின் மக்கள் மன்ற அலுவலகத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

காலை முதலே விஜய் வீடு மற்றும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த விஜய் எல்லோரிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாரிடமும் அதிகமாக பேசவில்லையாம். வந்தவுடன் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு புகைப்படம் எடுத்தவுடன் அடுத்தவர் அழைக்கப்பட்டார்கள்.
எல்லோரும் புகைப்படம் எடுத்தவுடன் அனைவருக்கும் கைகாட்டிவிட்டு கிளம்பிவிட்டார் நடிகர் விஜய். இனி அடிக்கடி ரசிகர்களை விஜய் சந்திப்பார் என்றும் விரைவில் அடுத்தது எந்த மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்படுவார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்திற்கு எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். தெலுங்கில் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாம்.

