“கொலை” படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்கும் விஜய் ஆண்டனி!

*”உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் ஆண்டனி!*

தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மேலும், நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனது சக நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்”.

‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ’கொலை’ திரைப்படம் ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments